பாவடை தாவாணியில் எளிமையாய் வந்து அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் தென்றல் நாயகி துளசி. ஸ்ருதி என்பதைவிட துளசி என்ற பெயர்தான் அனைவரின் நினைவிலும் நிற்கிறது. சினிமாவில் தொடங்கிய அவரின் பயணம் சின்னத்திரையில் வெற்றிகரமானதாக நீடிக்கின்றது. தன்னுடைய சின்னத்திரை வாழ்க்கைப் பற்றி துளசியிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.
அப்பா ராஜன் நாயர் ஒரு மிலிட்டரி எக்ஸ்சர்வீஸ்மேன், அம்மா சுலோச்சனா ராஜன், நான். இதை தவிர்த்துப் பெரிய பேக் ரவுண்டெல்லாம் எதுவுமில்லை. என் தாய்மொழி மலையாளம். சின்ன வயதில் டான்ஸ் கொஞ்சம் கத்துக்கிட்டு இருக்கேன் அவ்வளவுதான்.
நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது எல்லாம் கிடையாது. சின்ன வயதில் பள்ளி நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்படி எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நாடகத்தில் நடித்தேன். அப்போது நிகழ்ச்சியில் எடுத்த போட்டோவைப் பார்த்துவிட்டு நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால் பத்தாவது படிக்கும் போதுதான் நடிக்க வந்தேன். மலையாளப் படத்தில் அறிமுகமானேன். அதன்பிறகுதான் தமிழுக்கு வந்தேன். இந்த நான்கு வருடப் போராட்டத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
"ஜெர்ரி' படம் ரீலிஸிற்குப் பிறகு நல்ல கதாபாத்திரமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். அந்த நேரத்தில்தான் சன் டிவியில் விகடன் டெலிவிஷன் தயாரிப்பில் தென்றல் தொடருக்கு நடிக்கிற வாய்ப்பு வந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது அதனால் உடனே ஒப்புக்கொண்டேன்.டைரக்டர் குமரன் வந்து கதையைச் சொன்னார். "பாவாடை தாவணி போட்டுகிட்டு நீங்க சாதாரணமாக எப்பவும் வீட்டில் இருப்பது போல ஒரே ஒரு பொட்டு மட்டும் வெச்சுக்கிட்டு வாங்க ஒரு டெஸ்ட் செய்து பார்த்திடலாம்' என்று சொன்னார். பிறகு டயலாக் கொடுத்து பேசச் சொன்னார்கள் அதில் ஓ.கே. ஆகிவிட்டேன்.
துளசி கதாபாத்திரத்திற்கு இந்தளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று நினைக்கலை. ஒரு நல்ல பிராஜக்ட் ஒத்துக்கிட்டு செய்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. திரையுலகைச் சார்ந்தவர்களும் நிறைய பேர் ஃபோன் செய்து என் நடிப்பைப் பாராட்டினார்கள். அதைக் கேட்கும் பொழுது என் கேரக்டர் மீது இன்னும் ஆர்வம் அதிகம் ஆகிறது. துளசி கேரக்டரில் வரும் மேனரிஸம், உச்சரிப்பு,நடிப்பு எல்லாமே டைரக்டர் சொல்லி கொடுப்பதை அப்படியே செய்கிறேன். அவர் சொன்னதை அப்படியே என்னுடைய கதாபாத்திரத்தில் பிரதிபலிக்கிறேன்.
சினிமாவை விட தென்றல் தொடர் பெரியளவில் அங்கீகாரத்தை உண்டு பண்ணியிருக்கு. மலையாளத்தில் "தோஸ்த்' என்ற படம் நடித்திருக்கிறேன். அதுதான் என்முதல் படமும் கூட. "காதல் டாட் காம்', "ஜெர்ரி', "மந்திரம்' என மூன்று தமிழ் படங்களில் நடித்தேன். தெலுங்கில் இரண்டு, மூன்று படங்கள் நடித்திருக்கிறேன். இத்தனை படம் நடித்திருந்தாலும் எனக்கு இந்தத் தொடரும், துளசி கேரக்டரும்தான் பெரியளவில் பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது. இது, தென்றல் தந்த அங்கீகாரம்தான். பெரியத்திரையில் எதிர்பார்த்தது சின்னத்திரையில் கிடைத்திருக்கிறது என்று சொல்லிவிட்டு புன்னகையோடு விடைகொடுத்தார் ஸ்ருதி.